இவரே குண்டு வைப்பாரம்.. இவரே எடுப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்! - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Prasanth K

வியாழன், 17 ஜூலை 2025 (14:50 IST)

காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய கருத்துகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

காமராஜருக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஏசி வசதி செய்து கொடுத்தார் என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பேசியது காங்கிரஸார் மத்தியில் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதற்கு திருச்சி சிவாவும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த விஷயத்தை வைத்து நெருப்பு மூட்டி குளிர்காய சிலர் நினைக்கிறார்கள், நாம் ஒற்றுமையாக நின்று செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் திருச்சி சிவாவிவ் பேச்சு மற்றும் திமுகவின் அறிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 

கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?

 

பெருந்தலைவர் காமராஜர் பற்றி திரு. ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.

 

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?

 

அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?

 

காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?

 

இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க மு.க.ஸ்டாலின் அவர்களே!

 

அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று!

 

ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது! வாழ்க கர்மவீரரின் புகழ்!” என்று கூறியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் - திமுக இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்