தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்..! தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரிக்கை..!!

Senthil Velan

வெள்ளி, 31 மே 2024 (21:14 IST)
தபால் வாக்குகளின் முடிவுக்குப் பின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் இறுதிச்சுற்று எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
 
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் விதிகள் படி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான கையேட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
 
அதன்படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். 30 நிமிடங்களுக்குப் பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், மின்னணு இயந்திர இறுதிச் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
 
தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை பின்பற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சரியான நடைமுறை அல்ல.

ALSO READ: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல்.! கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

இந்தத் தகவல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சரியான நடைமுறையை தெரிவிப்பதுடன், அனைத்து வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்த சரியான நடைமுறையை வெளியிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்