திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.. புதுச்சேரி சட்டப்பேரவையில் பரபரப்பு:

Mahendran

வியாழன், 18 செப்டம்பர் 2025 (11:58 IST)
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
 
புதுச்சேரி சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. சபாநாயகர் ஆர். செல்வம், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பை வாசித்த பின்னர், சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு ஒரு விவகாரம் குறித்து பேச முற்பட்டார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் ஆர். சிவா உட்பட ஆறு திமுக உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர் மு. வைத்தியநாதன் உட்பட இரு உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.
 
மாசுபட்ட குடிநீர் விநியோகம் மற்றும் சட்டமன்றக் கூட்டத்தொடரை 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். சுயேச்சை எம்.எல்.ஏ நேருவும் இவர்களுடன் இணைந்து குரல் கொடுத்தார். சபாநாயகர் அவர்களை அமைதி காக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டார்.
 
இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த சபாநாயகர், அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, சபாநாயகரின் உத்தரவின் பேரில், அவை காவலர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்