திமுக பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது -அண்ணாமலை

வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:00 IST)
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் கோவை பயணத்தை முடித்துக் கொண்டு ஊட்டி சென்றுள்ளார்.

இதுபற்றி தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

''ஊட்டி என் மண் என் மக்கள்  பயணம், கடுமையான குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி 
அவர்கள் மீது கொண்டுள்ள பேரன்பும், பாஜக மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவும், பெருந்திரளெனக் கூடி மக்கள் ஒரு புரட்சி செய்திருக்கிறார்கள். 
 
இந்தியா முழுவதிலும் இருந்து, ஊட்டி நோக்கி மக்கள் பயணம் வருகிறார்கள். ஆனால், ஊட்டி மக்களுடைய பிரச்சனைகளைக் காலம் காலமாக இருக்க கூடிய அரசியல் கட்சிகள் தீர்க்கத் தவறி விட்டனர். ஆளுங்கட்சி சம்பாதிப்பதற்காக மட்டுமே திட்டங்கள் போடுகிறார்கள். சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு சரியான வாகன நிறுத்த வசதிகள் செய்யவில்லை. ஊட்டி நகராட்சியில் சொத்து வரி கட்டணம் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
 
திராவிட முன்னேற்ற கழகம் பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஊட்டி படுகா சமுதாயத்தினருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி எண் 280ல் திமுக கூறியது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தப் பகுதி திமுக அமைச்சர் ராமச்சந்திரன், படுகா சமூக மக்கள் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து பெறத் தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார். நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், படுகா சமூக மக்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவார் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
 
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301ல், தமிழக மாநகராட்சி நகராட்சியில் வசூலிக்கப்படும் வாடகையையும் சொத்து வரியையும் குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஊட்டி சந்தையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கடைக்கு வாடகை ₹13,500 ரூபாய் வசூலிக்கிறார்கள். இங்கு இருக்கும் சிறு வியாபாரிகளை காலி செய்யச் சொல்கிறார்கள். 100 ஆண்டு காலமாக ஐந்து தலைமுறையாக இருக்கக்கூடிய மக்களை, வெறும் 100 மணி நேரத்தில் காலி செய்யச் சொல்கிறார்கள். சர்வாதிகாரத்தனமாக மக்களை வெளியேற்ற முயற்சி செய்தால், பாஜக தலைவர்களும் தொண்டர்களும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவார்கள்' 'என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்