தகுதிநீக்க வழக்கு - ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

செவ்வாய், 1 மே 2018 (14:51 IST)
தகுதிநீக்க வழக்கில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது ஒபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர். கொரடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 
 
இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தகுதிநீக்க வழக்கில், சபாநாயகர் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என தகவல் வெளியானதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக   உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கிற்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்