கோவிலில் 13 ஐம்பொன் சிலைகள் கடத்திய வழக்கில் தீனதயாளன் ஆஜர்

வியாழன், 14 ஜூலை 2016 (15:38 IST)
ஏராளமான இடங்களில் சிலைகள் கடத்திய வழக்கில் சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் புதனன்று திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 

 
நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த நாறம்பூ நாதர் கோவில் உள்ளது. கடந்த 2005 ஜூன் 18இல் இந்த கோவிலில் 13 ஐம்பொன் சிலைகள் திருடு போனது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
இதில், தொடர்புடைய அருப்புக் கோட்டை பாலாஜி, சின்னகாஞ்சிபுரம் ஆறுமுகம், மதுரை முருகன், ஷாஜகான், அருணாசலம், காரைக்குடி தினகரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சமீபத்தில் சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனும் அடங்குவார்.
 
அவர் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்து விட்ட நிலையில், இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இதற்காக தீனதயாளனை புதனன்று, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் காவல்துறையினர் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்