சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் பலியான, தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் விஜயராஜின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள மேலவாடா என்ற கிராமத்தில் மாவோயிட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதில், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜூம் பலியானார்.
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் விஜயராஜ் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். விஜயராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.