ஜெயலலிதாவை சிகிச்சை அறைக்கே சென்று விசாரித்த காங்கிரஸ் தலைவர்

புதன், 12 அக்டோபர் 2016 (12:07 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் சிகிச்சை பெறும் அறைக்கே சென்று நலம் விசாரித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதனால், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
 
இதற்கிடையில், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சந்திக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், யாரையும் மருத்துவமனை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை.
 
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மட்டும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டுக்கு சென்றதாகவும், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
 
இதற்கிடையில், ராகுல் காந்தி, வைகோ, முக.ஸ்டாலின், திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன், சீமான், தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் நாசர் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்று திரும்பி வந்தனர்.
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் சிகிச்சை பெறும் அறைக்கே சென்று நலம் விசாரித்ததாக எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் அறைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்கள் இருந்தார்கள். முதல்வர் நலமாக இருக்கிறார். நன்றாக தேறி வருகிறார். அவருக்கு எந்தக் குறையும் இல்லை.
 
வீண் வதந்திகள் பரவி வருகிறது. அதையெல்லாம்நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர். முதல்வர் ஜெயலலிதாவால் பேச முடிந்தாலும் தங்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் பேசாமல் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்