தமிழகத்தின் பொறுப்பு முதல்வர் வெங்கையா நாயுடு, ஆளுநர் அமித் ஷா: இயக்குநரின் கிண்டல்!

திங்கள், 12 ஜூன் 2017 (11:47 IST)
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்த தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்த சென்ற மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தை ஏவி சிறையில் அடைத்தது அரசு.


 
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆனால் எதற்கும் அசராத அரசு திருமுருகன் காந்தி மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு அவரை வெளியே விடாமல் சிறையில் அடைத்தது. இந்நிலையில் இதனை கண்டித்து கடந்த சனிக்கிழமை சென்னை அம்பேத்கர் திடலில் கண்டன கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
 
இந்த கண்டன கூட்டத்தில், மனித உரிமை ஆர்வலர்கள், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தை ஏவியதற்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.
 
இந்த கூட்டத்தில் பேசிய சின்னத்திரை இயக்குநர் கவிதாபாரதி, பல்வேறு முரன்பாடுகளால் வேறு வேறு வழியில் போரடிக்கொண்டிருந்த மக்கள் நல இயக்கங்களை இணைக்கும் பணியை அரசாங்கம் செய்து வருகிறது. அப்படி இன்று உணர்வெழுச்சிமிக்க இந்த இயக்கங்களை ஒன்றிணைத்திருக்கிற தமிழகத்தின் பொறுப்பு முதல்வர் வெங்கையாநாயுடு அவர்களுக்கும், தமிழ்நாட்டின் துணைமுதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் பொறுப்பு கவர்னர் அமித் ஷா அவர்களுக்கும் நன்றிசொல்லும் கூட்டமாகத்தான் இதை நான் எடுத்துக்கொள்கிறேன் என்றார் அதிரடியாக.
 
தொடர்ந்து பல தலைவர்கள் தங்கள் பாணியில் அரங்கம் அதிரும் அளவுக்கு வீரியமிக்க கருத்துக்களை முன்வைத்து திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து பேசினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்