அய்யோ.. அம்மா..! ஓபிஎஸ் படத்தை மிதித்து வழுக்கி விழுந்த தொண்டர்!

திங்கள், 11 ஜூலை 2022 (14:58 IST)
முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரது புகைப்படங்கள் கட்சி அலுவலகத்திலிருந்து வீசியெறியப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுசெயலாளராக பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. இதற்கிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக கட்சி அலுவலகத்தை கதவை உடைத்துக் கொண்டு சென்றதால் பரபரப்பு எழுந்தது.

பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுக கட்சி அலுவலகங்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை அதிமுகவினர் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுக அலுலவகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. ஓபிஎஸ் புகைப்படங்களை எடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதை பொதுவெளியில் போட்டு மிதிக்க முயன்றபோது தொண்டர் ஒருவர் வழுக்கி விழுந்தார். பின்னர் அந்த படத்தை செருப்பால் அடித்தும், உடைத்தும் அவர்கள் அவமரியாதை செய்தனர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்