தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை காவல் நிலையத்திற்கு உள்ளேயே தாக்கிய முதல்வரின் உறவினர்கள்

செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (17:29 IST)
தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு உள்ளேயே முதல்வரின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
 
வேலூர் மாவட்டம் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த கமல்(23) என்பவர் வேலூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அதேபோல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ஆர்த்திகா (21) ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
 
இவர்கள் இருவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ஆர்த்திகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆர்த்திகாவின் தந்தை பாஸ்கர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி கமலும் ஆர்த்திகாவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் வேலூர் வந்துள்ளனர். இதற்கிடையில் கார்த்திகாவின் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
இதனால் அவர்கள், கமலின் தந்தை சங்கர் என்பவரை பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த கமலும், ஆர்த்திகாவும் நேற்று மதியம் வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை விசாரணைக்காக பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
 
இந்த தகவலையறிந்த கார்த்திகாவின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கமலை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இது குறித்த புகார் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் உள்ளதால், காதல் ஜோடியினரை போடிநாயக்கனூர் காவல் துறையினரிடன் ஒப்படைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்