இத்திட்டம் பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, அக்குழந்தைகள் 18 வயது அடையும் வரை பள்ளி கல்வியை இடையூறு இல்லாமல் தொடர, மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கும் அரசு வழிவகை செய்யும்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த 'அன்புக்கரங்கள்' திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது, தகுதியுள்ள குழந்தைகளுக்கு உதவித்தொகையை நேரடியாக வழங்கினார். மேலும், பெற்றோரை இழந்து, +2 வகுப்பை முடித்து, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு கணினிகளையும் வழங்கினார்.