போலீசாக ஆசை ; மனவளர்ச்சி குன்றியவரின் ஆசையை நிறைவேற்றிய சென்னை கமிஷனர்...

சனி, 19 ஆகஸ்ட் 2017 (19:00 IST)
காவல்துறை அதிகாரியாக வேண்டும் என விரும்பிய ஒரு மனவளர்ச்சி குன்றிய (Genetic Disorder) நபரின் ஆசையை சென்னை கமிஷனர் நிறைவேற்றியுள்ளார்.


 

 
சென்னை, ஜாபர்கான்பேட்டை சேர்ந்த ராஜீவ் தாமஸ் தற்போது கத்தார் நாட்டில் வசித்து வருகிறார். அவரின் மகன் ஸ்டீவன் மேத்யூ (19) மரபணு கோளாறால் (Genetic Disorder) பாதிக்கப்பட்டவர் ஆவார். சமீபத்தில் கத்தார் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, மனநலம் குன்றிய சிறுவர்களை சந்தித்து உரையாடினார். அந்த குழுவில் ஸ்டீவனும் இருந்தார். அப்போது, எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என பிரதமர் கேட்க, ‘நான் போலீசாக விரும்புகிறேன்’ என ஸ்டீவன் பதிலலித்திருந்தார். 
 
இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்துடன் சென்னை வந்த ராஜீவ் தாமஸ், தனது மகன் ஸ்டீவனின் ஆசை குறித்து சென்னை கமிஷனருக்கு இ-மெயில் அனுப்பினார். அதைக் கணிவுடன் பரிசீலித்த கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், ஸ்டீவனின் ஆசையை நிறைவேற்றுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
அதன் படி, சென்னை அசோக் நகர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட ஸீடீவனுக்கு போலீஸ் எஸ்.ஐ உடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. அவருக்கு அதிகாரிகள் சல்யூட் அடிக்க எஸ்.ஐ இருக்கையில் அவரை அமர வைத்தனர். அங்கு வாக்கி டாக்கியில் பேசினார் ஸ்டீவன். அதன் பின் ரோந்து வாகனத்திலும் அவர் அழைத்து செல்லப்பட்டார். மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை ஒரு மணி நேரம் அவர் எஸ்.ஐ அதிகாரியாகவே மதிக்கப்பட்டார். இதனால் ஸ்டீவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்த சம்பவம் போலீசார் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
மகனின் ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு ஸ்டீவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜூவ் தாமஸ், என் மகனைப் போன்றவர்களுக்கு கனவுகள் அதிகம். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் அவர் சாதிப்பார்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்