ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அந்த போராட்டத்தில் தற்போது ஐ.டி. ஊழியர்களும் களம் இறங்கியுள்ளனர். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் வளாகத்தில் உள்ள ஏராளமான மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பல ஆயிரம் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தரமணி கிண்டி மற்றும் போரூர் டி.எல்.எப் ஆகிய இடங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துவிட்டு சாலையில் இறங்கி போராட துவங்கியுள்ளனர்.