இட்லி துணியை ஏன் சுத்தம் செய்யல..! – காதை கடித்த அம்மா உணவக மேற்பார்வையாளர்!

வியாழன், 30 ஜூன் 2022 (12:22 IST)
சென்னையில் அம்மா உணவக ஊழியரின் காதை மேற்பார்வையாளர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் தமிழக அரசின் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த தாமரை செல்வி என்ற பெண் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் காலையில் வழக்கம்போல் தனது சமையல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உணவக மேற்பார்வையாளர் ராதிகா, இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை என தாமரைச்செல்வியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கட்டிப்பிடித்து தரையில் புரண்டுள்ளனர். ஆத்திரமடைந்த ராதிகா, தாமரைச்செல்வியின் காதை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த தாமரைச்செல்வி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ராதிகா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்