கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை படுகொலை செய்த மனைவி : சென்னையில் பயங்கரம்

புதன், 17 ஆகஸ்ட் 2016 (10:31 IST)
பலமுறை கண்டித்தும், கள்ளக்காதலை கைவிட மறுத்த, தனது கணவனை, அவரது மனைவியே கத்தியால கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் சென்னை மண்ணடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை மண்ணடி பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருபவர் அக்பர் (49). அவரது மனைவி பாத்தாமுத்து(35). அவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகள் மற்றும் பள்ளியில் படிக்கும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். அவர்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் வசித்து வந்தனர். 
 
அக்பருக்கும், ரஹேனா என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக அவருக்கும் அவரது மனைவிக்கும் நெடுநாட்களாக சண்டை நடந்து வந்தது.
 
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்ற அக்பர், உணவு அருந்தி விட்டு அவரது அறையில் உறங்க சென்றார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். 
 
நேற்று காலை அக்பரை சந்திப்பதற்காக அவரது உறவினர் சையது என்பவர் வீட்டிற்கு வந்துள்ளர். அவர் நேராக அக்பரின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்பரின் மனைவி மற்றும் குழந்தைகள் ஓடிவந்தனர். 
 
அக்பரின் வாயில் துணியை திணித்து, யாரோ அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர். யாரோ மர்ம நபர்கள் எனது கணவனை கொலை செய்திருக்கலாம் என பாத்தாமுத்து கூறினார். கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
 
ஆனால். பூட்டிய வீட்டிற்குள் கொலை நடந்த சம்பவம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும். போலீசாரின் மோப்ப நாய், அக்பரின் மனைவி பாத்தாமுத்துவை பார்த்து தொடர்ந்து குரைத்து வந்தது. இதனால் அவரின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
 
அதில், அவர்தான் அவரின் கணவர் அக்பரை கொலை செய்தது தெரியவந்தது. கள்ளக்காதல் தொடர்பாக எழுந்த சண்டையில் ஆத்திரம் அடைந்த பாத்தாமுத்து, அன்று இரவு அக்பர் தூங்கியதும், வாயில் துணியை திணித்து, கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. 
 
இந்த கொலையில் அவர் மட்டும்தான் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்