போபால் பாலத்திற்கு டஃப் கொடுக்கும் ஆந்திரா மேம்பாலம்.. எந்த ஊரு எஞ்சினியர் கட்டியது?

Mahendran

புதன், 18 ஜூன் 2025 (13:47 IST)
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் மேம்பாலம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் திறக்கப்படாத நிலையில், இந்த வளைவு வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் தினமும் 3 லட்சம் பேர் பயன்படுத்தக்கூடியது.
 
இந்நிலையில், போபால் மேம்பாலத்துக்கு சவால் விடும் வகையில், ஆந்திரபிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட கூகுள் மேப் வரைபடம், ஆந்திராவின் வாசுதேவபுரம் அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை 57-ல் ஒரு கோவில் சுற்றுச்சுவர் போல, மூன்று கூர்மையான திருப்பங்களுடன் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தைக் காட்டுகிறது.
 
இந்த வடிவமைப்பை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது கொரோனா காலத்தில் படித்த பொறியாளர்களால் கட்டப்பட்டது போல உள்ளது என்றும், ஏன் இப்படி வளைவாக இல்லாமல், ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 
 
தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆளும் ஆந்திராவில் இப்படி ஒரு மோசமான பொறியியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் குவிந்துள்ளன. போபால் மேம்பாலமே விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், ஆந்திராவின் இந்த புதிய மேம்பாலம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்