அம்மா முழு உடல் பரிசோதனை மையம் - திறந்து வைத்த எடப்பாடி

வெள்ளி, 8 ஜூன் 2018 (12:06 IST)
தமிழக அரசு சார்பில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் தங்கள் முழு உடல் பரிசோதனையை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது. இது ஜெ.வின் கனவு திட்டம் எனக் கூறப்படுகிறது.
 
சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் இந்த மையத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
 
இந்த மையத்தில் எல்லா நோய்களுக்கும் பரிசோதனை செய்துகொள்ளலாம். மேலும், ரத்த பரிசோதனை முதல் மார்பக வரைவு, எழும்பு தின்மை அளவீடு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைளையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் செய்து கொள்ள முடியும்.
 
இதில் மொத்தம் 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
அம்மா கோல்ட் திட்டத்தின் கீழ் ரூ. 1000 செலுத்தி 60 வகையான உடல் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
 
அம்மா டைமண்ட் திட்டத்தின் கீழ் ரூ. 2000 செலுத்தி 65 வகையான உடல் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
 
அம்மா பிளாட்டினம் திட்டத்தின் கீழ் ரூ.3000 செலுத்தி 70 வகையான உடல் பரிசோதனையை செய்து கொள்ளலாம். 
 
ஓமந்தூர் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் தரை தளத்தில் இந்த பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  முழு உடல் பரிசோதனைக்கு 7338835555 மற்றும் 044-2566611 என்ற எண்களில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்