மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

Mahendran

வியாழன், 26 ஜூன் 2025 (10:31 IST)
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற தனியார் நிறுவன ஊழியர், அமேசான் செயலி மூலம் விவோ வி50 5G மொபைல் வாங்க ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவர் 35,000 ரூபாய் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இந்த நிலையில், அமேசான் டெலிவரி ஊழியர் மொபைல் போன் வந்திருப்பதாக கூறி பார்சலை கொடுத்தபோது, விக்னேஷ் அவர் கண்முன்னே பார்சலை பிரித்துப் பார்த்துள்ளார். ஆனால், அதில் மொபைல் ஃபோனுக்கு பதிலாக ஒரு சென்ட் பாட்டில் இருந்துள்ளது.
 
இதை கண்ட விக்னேஷ், பார்சலை வாங்க மறுத்து திருப்பி எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், "உங்கள் பெயரில்தான் பார்சல் வந்திருந்தது. புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் எங்கள் நிறுவன அதிகாரியிடம் பேசுங்கள்" என்று டெலிவரி ஊழியர் கூறிவிட்டு சென்றுவிட்டதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து, பார்சல் ஒருவேளை மாறி இருக்கலாம், மொபைல் ஃபோனை அனுப்பி வைக்கிறோம் என்று அந்த ஊழியர் கூறிய நிலையில், விக்னேஷ் காத்திருந்தும் அவர் சொன்னபடி பார்சல் வரவில்லை. இதனை அடுத்து, அமேசான் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று கூறிவிட்டதாக விக்னேஷ் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
 
வேறு வழியின்றி, விக்னேஷ் இந்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்