வேலூரில் அக்னிபாத் ஆள்சேர்ப்பு முகாம்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! – முழு விவரம் உள்ளே!

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (12:48 IST)
மத்திய அரசின் அக்னிபாத் குறுகிய கால ராணுவ பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் நடைபெற உள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் குறுகிய கால ராணுவ பணி சேர்ப்பு திட்டத்தில் பல லட்சம் இளைஞர்கள் பணியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கடற்படை, விமான படைகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் பெற்று முடிந்த நிலையில் ராணுவ பணிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் நவம்பர் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கபட்டு, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியனை சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்கலாம்.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பணி, எழுத்தர், பண்டக காப்பாளர் மற்றும் ட்ரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிகளுக்கான கல்வி வரம்பு 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி என்று கூறப்பட்டுள்ளது. ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக இன்று முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை தங்களது பெயர்களை பதிவு செய்ய முடியும்.

விண்ணப்பித்தோருக்கான தேர்வு அனுமதி சீட்டு நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படும். மேலும் விளக்கங்கள் பெற “ஆள் சேர்ப்பு அலுவலகம், புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை – 600 009” என்ற முகவரியிலோ அல்லது 044 – 2567 4924 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்