அதிமுக எம்.எல்.ஏக்கள் அப்பல்லோவுக்கு வர உத்தரவு

திங்கள், 5 டிசம்பர் 2016 (08:45 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த 70 நாட்களுக்கும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
 
மேலும், அவரின் இருதயநாள அடைப்பை சீர் செய்வதற்காக ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது. 
 
இதைத் தொடர்ந்து அப்பல்லோ வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். முதல்வர் நலம் பெற வேண்டும் என அவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 135 பேரும், இன்று காலை 11 மணியளவில் சென்னை அப்பல்லோவிற்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த தகவல் அப்பல்லோ வளாகத்தில் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்