20 மாவட்டங்களில் நிர்வாகிகளுக்கான தேர்தல் தொடக்கம்! – அதிமுக அறிவிப்பு!

திங்கள், 13 டிசம்பர் 2021 (08:28 IST)
அதிமுக கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று தொடங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் கட்சியை உறுதிபடுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து இன்று அதிமுகவின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள நெல்லை, விருதுநகர் மேற்கு, நாகை, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு, செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு ஆகிய 20 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

இன்று தொடங்கி நாளை வரை நடைபெறும் இந்த தேர்தலுக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட தேர்தல் ஆணையருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி இந்த தேர்தலை நல்ல முறையில் நடத்தவும் அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்