7 வாக்குகளில் தோல்வி அடைந்த வேட்பாளர் திடீர் மயக்கம்: உதவிய வெற்றி பெற்ற வேட்பாளர்

வெள்ளி, 3 ஜனவரி 2020 (06:46 IST)
ஏழே வாக்குகளில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் ஈரோடு அருகே நடந்துள்ளது
 
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டு அதிமுக வேட்பாளராக ராமலிங்கம் என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பி.சதீஷ்குமார் உள்பட 7 பேரும் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். 
 
நேற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது ராமலிங்கம் 1,352 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் 1,359 வாக்குகளும் பெற்றதால் சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் குறைவான வாக்கு வித்தியாசம் என்பதால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு ராமலிங்கம் கோரிக்கை விட மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டது
 
மறு வாக்கு எண்ணிக்கையிலும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் திடீரென அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். தன்னிடம் தோல்வி அடைந்த வேட்பாளரை மனிதாபிமான அடிப்படையில் உதவிய சதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்