ஐயோ... நான் அப்படி கூறவே இல்லை - மறுப்பு தெரிவித்த நடிகை கஸ்தூரி

செவ்வாய், 14 மார்ச் 2017 (13:03 IST)
தன்னை ஒரு பிரபல நடிகர் படுக்கைக்கு அழைத்தார் என தான் எந்த பத்திரிக்கையிலும் பேட்டி கொடுக்கவில்லை என நடிகை கஸ்தூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
தமிழ் சினிமா உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
என்னிடம் கேட்ட விஷயங்கள் கிடைக்கவில்லை என்றதும், என்னை சில படங்களிலிருந்து தூக்கி விட்டனர். தற்போது அரசியல்வாதியாக உள்ள ஒரு நடிகர், என்னிடம் கேட்ட ஒரு விஷயத்திற்கு நான் முடியாது எனக் கூறிவிட்டேன். உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார்”  என கஸ்தூரி கூறியிருந்தார். 
 
எனவே, கஸ்தூரியை அந்த நடிகர் படுக்கைக்கு அழைத்தார். ஆனால் கஸ்தூரி மறுத்துவிட்டார் என பெரும்பாலான ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. 
 
இந்நிலையில் கஸ்தூரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நான் மகளிர் தினத்திற்காக நான் கொடுத்த பேட்டி அது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி போல் எதுவும் நடக்கவில்லை. வியாபாரத்திற்காக சில இணையதளங்களில் இப்படி செய்தி வெளியிட்டுள்ளனர் என கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்