மக்களை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்!

புதன், 18 நவம்பர் 2020 (07:20 IST)
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமார் அவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொரோனா என்ற கொடும் நோயிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றியது போல் செம்பரபாக்கம் ஏரி நிரம்பியுள்ள நிலையில் அந்த ஏரியின் கரையோர மக்களையும் தகுந்த நடவடிக்கை எடுத்து காப்பாற்றுங்கள் என்று கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கவனத்திற்கு மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
 
வணக்கம்‌. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல்‌, கலைமகள்‌ நகர்‌ பகுதியில்‌ நான்‌ பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன்‌. கடந்த 2015ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌, செம்பரம்பாக்கம்‌ ஏரி திறக்கப்பட்ட பொழுது, எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரைக்கும்‌ பல ஆயிரம்‌ வீடுகள்‌ சேதமடைந்தன. உயிர்‌ சேதமும்‌ ஏற்பட்டது. இந்த ஆண்டும்‌ செம்பரம்பாக்கம்‌ ஏரியில்‌ நீர்‌ மட்டம்‌ 21 அடியைத்‌ தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடிக்குமேயானால்‌ 2015 ஆம்‌ ஆண்டைப்‌ போல பெரும்‌ பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்‌. ஆகவே, தாங்கள்‌ கவனத்தில்‌ இதைக்‌ கொண்டு, முன்னேற்பாடாக.
ஏரியில்‌ உள்ள தண்ணீரை அளவுடன்‌ திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால்‌, கரையோரம்‌ இருப்பவர்களுக்கு உயிர்‌ மற்றும்‌ பொருள்‌ சேதம்‌ ஏற்படாமல்‌ தடுக்க இயலும்‌.
 
எனவே தயவு கூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக்‌ கொள்கிறேன்‌. தங்களால்‌ இதை செய்ய இயலும்‌ என நான்‌ ஒருமனதாக நம்புகிறேன்‌. கொரரோனா என்னும்‌ கொடு நோயிலிருந்து நம்‌ தமிழக மக்களை எவ்வண்ணம்‌ காப்பாற்றிக்‌ கொண்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமே கரையோரம்‌ வசிக்கும்‌ மக்களையும்‌ காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.
 
 
இவ்வாறு நடிகர் விஜயகுமார் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மக்களை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்