நில அளவீட்டை தடுத்த ஆசிரியரை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்

செவ்வாய், 26 ஜூன் 2018 (11:46 IST)
கிருஷ்ணகிரி அத்திபாடி அருகே சேலம் பசுமைவழிச் சாலைக்காக, தனது நிலத்தை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்திய ஆசிரியரை, போலீஸார் கைது செய்து இழுத்துச் சென்றனர்.
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
 
இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு ஏன் அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் பசுமை வழிச்சாலைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பாடியில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் நிலத்தை அளக்க அதிகாரிகள் சென்றனர். இதற்கு ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து அங்கு இருந்த காவலர்கள், ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்