கோவையில் ஜெகந்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சனி, 24 ஜூன் 2023 (15:21 IST)
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் கடந்த 1967-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவிற்கு வெளியே அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கிருஷ்ண பக்தர்களால் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கோவை இஸ்கான் அமைப்பு சார்பில் 31-வது ஆண்டு ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்  கோவையில் இன்று நடைபெற்றது.
 
கோவை ராஜவீதியில் உள்ள தேர்முட்டி திடலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகந்நாதர், சுபத்ரா தேவி, பலதேவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தேரை இஸ்கான் அமைப்பின் மூத்த தலைவர்கள் பானு சுவாமி, மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 
கோலாட்டம், கும்மியாட்டம்
 
தேருக்கு முன்பாக பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று பஜனை பாடியபடி சென்றனர். மேலும் பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி சென்றனர். பக்தர்களுக்கு இந்த தேர்திருவிழாவின் முக்கியத்துவத்தையும், ஜெகந்நாதரின் லீலைகள் குறித்தும் பக்தி வினோத சுவாமி மகராஜ் எடுத்து கூறினார்.
 
தேர்முட்டியில் புறப்பட்டு ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேர்முட்டி திடலை அடைந்தது.
 
தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. மேலும் கோவை மாநகர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் சிறப்பு ஆராதனை, ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்