சென்னை அண்ணா சாலையில் திடீரென தீப்பிடித்த கார்! பெரும் பரபரப்பு

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (22:18 IST)
சென்னை அண்ணா சாலை என்பது எப்போதும் போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையாக இருந்து வரும் நிலையில் இந்த சாலையில் இன்று மாலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுவையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது டிரைவருடன் மகேந்திர வெரிட்டோ என்ற  காரில் சென்னை வந்துள்ளார். இந்த கார்  அண்ணாசாலையில் உள்ள ஆயிரம் விளக்கு என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு புகை எங்கே இருந்து வருகிற்து என்பதை பார்த்து அதனை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார்.
 
 
இந்த நிலையில் எதிர்பாரத விதமாக திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அந்த சமயத்தில் காற்று அதிகமாக இருந்ததால் மளமளவென தீ பரவி கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
 
 
இந்த தீ விபத்து காரணமாக அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து காவலர்கள் உடனடியாக போக்குவரத்தை சீர் செய்ததோடு, தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்