மாஞ்சா நூல் விற்ற 8 பேர் கைது – சென்னைப் போலிஸ் அதிரடி !

புதன், 6 நவம்பர் 2019 (10:08 IST)
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் மாட்டி 2 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து மாஞ்சா நூல் விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொருக்குபேட்டையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ், அவரது 15 வயது மகன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் மாஞ்சா நூலால் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இனி மாஞ்சா நூல் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் அறிவித்துள்ளார். மேலும் அவர் ‘இனி இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. அதனடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இனி சென்னையில் மாஞ்சா நூல் விற்பவர்கள் மேல் குண்டர் சட்டம் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விற்கப்படும் மாஞ்சா நூலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மாஞ்சா நூல் விற்பனை கண்காணிக்கப்பட்டு வந்தது. இது சம்மந்தமாக புரசைவாக்கம், தண்டயார்ப் பேட்டை  மற்றும் திருவொற்றியூர் அருகே உள்ள திருச்சினாங்குப்பம் ஆகிய பகுதிகளில் மாஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிமேடு பகுதியில் காற்றாடி விற்ற பெட்டிக்கடைக் காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்