ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் தற்போது நிரந்தர பணி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் சில பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து கடந்த 2022ம் ஆண்டு அரசாணை 271 வெளியிடப்பட்டது. அதேபோல 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடர்வதன் அவசியம் குறித்தும் ஆராய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி 52 ஆயிரத்து 578 பணியிடங்களில் பல்வேறு வகையான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47013 பணியிடங்்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றலாம் என்றும், தொழிற் கல்வி ஆசிரியர் மற்றும் பல்வேறு ஆசிரியர் அல்லாத 5418 தற்காலிக பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக தற்காலிகமாக தொடரலாம் என்றும், இந்த பணியிடங்களில் இருப்பவர்கள் ஓய்வு பெறும் போது இந்த பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் அல்லாத 145 பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக தொடர்வதுடன் அவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கலாம் என்றும், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) பணியிடங்களை புத்தாக்கம் செய்யலாம் என்றும், முடிவு எடுக்கப்பட்டு பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தற்காலிக பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டி பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மேற்கண்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு அதையேற்று 47013 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் உள்ளவர்கள் ஓய்வுக்குப் பிறகு நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவர்கள் ஓய்வு பெறும் வரை தற்காலிக பணியிடங்களாக தொடரலாம் என்றும், அவர்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்ய அனுமதி வழங்கலாம் என்றும், 145 பணியிடங்களுக்கு இறுதியாக தொடராணை வழங்கப்பட்டு அந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் 31.12.2028வரை தொடர் நீட்டிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது. அத்துடன் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண், பெண்) மற்றும் முதன்மைக் உடற்கல்வி ஆய்வாளர்(பெண்) ஆகிய இரு பணியிடங்களுக்கு புத்தாக்கம் செய்து 18.10.2004ல் எண் 155 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.