விபத்தில் 3 இளைஞர்கள் பலியான பரிதாபம்

ஞாயிறு, 20 நவம்பர் 2016 (17:09 IST)
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.


 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த அஜீத்குமார் (20), அசோக்குமார் (19) மற்றும் அம்பலூரை சேர்ந்த பூவரசன் (18) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சின்ன மேட்டூர் என்ற பகுதியை கடக்கும் போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அஜீத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த அசோக்குமார் மற்றும் பூவரசன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பள்ளி பேருந்து ஓட்டுனர் தப்பி சென்றுவிட்டார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வாணியம்பாடி தாலுகா காவலர்கள், தப்பி சென்ற பள்ளி பேருந்து ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்