ராணுவ வீரர்களுக்கு கரூர் ஆசிரியர்கள் அனுப்பிய 13000 ராக்கிகள்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (21:54 IST)
ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு இந்திய எல்லையில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு கரூர் பரணி பார்க்க கல்வி குழும சாரண ஆசிரியர்கள் இக்கட்டான கொரொனா சூழ்நிலையிலும் 13000 ராக்கிகளை தயார் செய்து தேசபக்தியோடு அனுப்பியது பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரின் அமோக வரவேற்பு மற்றும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.  

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தனது  ‘ராக்கீஸ் பார் சோல்ஜர்ஸ்’ அமைப்பின் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள தன்னார்வலர்களை  ஒருங்கிணைத்து ராக்கி கயிறுகளை சேகரித்து எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமையகம் மூலமாக அனுப்பி வருகிறார்.  

இதன் ஒரு பகுதியாக நிகழாண்டில்,  கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர்  முனைவர். சொ. ராமசுப்பிரமணியன் தலைமையில் பரணி பார்க் கல்வி குழுமத்தின் சாரணர் தன்னார்வ ஆசிரியர்கள் 90 பேர் இணைந்து  13000 ராக்கிகளை தயார் செய்து ‘ராக்கீஸ் பார் சோல்ஜர்ஸ்’ அமைப்பின் மூலமாக ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளனர். 

இது குறித்து கேட்ட போது நம்மிடம் பேசிய முனைவர். சொ. ராமசுப்பிரமணியன், “பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் வழிகாட்டுதலில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் குழும மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆயிரக்கணக்கான ராக்கி கயிறுகளை தேசபக்தியோடு தயாரித்து  இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வருகிறோம். இந்த ஆண்டு கொரொனா சூழ்நிலையால் மாணவர்கள்  ராக்கி தயாரிப்பில் ஈடுபடவில்லை. 
எல்லையில் நாம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் கொரொனாவோடு மட்டுமல்லாமல் நம் நாட்டின் எதிரிகளோடும் போராடி நம் நாட்டை பாதுகாத்து வருகிறார்கள் . எனவே தன்னார்வ சாரணர் ஆசிரியர்கள் 90 பேர் ஒன்று சேர்ந்து அவரவர் வீடுகளில் ராக்கி கயிறு தயார் செய்து 13000 ராக்கிகளை சேகரித்தோம். அவற்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் மூலமாக நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளுடன் சேர்த்து புது தில்லியில்  ராணுவ அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நாட்டின்  பல்வேறு எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ரக்ஷா பந்தன் தினத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

திருக்குறள் ராக்கி:
இந்த ஆண்டு லடாக் எல்லையில் அண்மையில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாடிய பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தியதைக் கொண்டாடும்  விதமாக புது முயற்சியாக திருக்குறள் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திருக்குறள் ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களின் வெற்றிப்படங்களுடன் தயாரித்து அனுப்பினோம். 

பசுமை விதை ராக்கி:
மேலும் இயற்கை அன்னையைப் பாதுகாக்கும்   விதமாக பசுமை  விதைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான  பசுமை ராக்கி கயிறுகளையும் தயாரித்து அனுப்பினோம். 

ராணுவ வீரர்களுக்கு ஆசிரியர் சமூகம் சார்பாக அன்பையும் வணக்கத்தையும் தெரிவிவிக்கும் அற்புதமான நிகழ்வு இது. இந்த நான்கு ஆண்டுகளில் இது வரை ஒரு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரம் ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளோம். “ என்று ராமசுப்பிரமணியன் கூறினார்.

இக்கட்டான கொரொனா சூழ்நிலையிலும் 13000 ராக்கிகளை தயார் செய்து தேசபக்தியோடு ராணுவ வீரர்களுக்கு அனுப்பிய கரூர் பரணி பார்க்க கல்வி குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்களை ‘ராக்கீஸ் பார் சோல்ஜர்ஸ்’ அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் பெற்றோர், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்