திருட்டு பட்டம் கட்டியதால் இளம்பெண் தற்கொலை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சனி, 30 ஜூலை 2016 (13:45 IST)
ஈரோடு, மூலப்பளையம் பகுதியை சேர்ந்த பிரியா என்பவர் அப்பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் மீது பழக்கடையில் வேலை பார்த்த ஒருவர் திருட்டு பட்டம் சுமத்தியதால் அவர் தற்கொலை செய்துள்ளார்.


 
 
கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரியா பழக்கடையில் இருந்த 6000 ரூபாயை திருடியதாக அந்த கடையில் வேலை பார்த்த அழகர் ராஜா என்பவர் குற்றம் சுமத்தினார்.
 
தன் மீது திருட்டு பட்டம் கட்டியதால் மனமுடைந்த பிரியா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அழகர் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
 
அழகர் ராஜா மீது ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அழகர் ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறையும், 100 ரூபாயும் அபராதம் விதித்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்