1 கோடி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
திங்கள், 18 மே 2009 (17:59 IST)
ஒரு கோடியே 26 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் 7 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வருகிற 29ஆம் தேதி அன்றே பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு விடைத்தாள் நகல் வழங்கவும், மதிப்பெண் மறு மதிப்பீடுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல் பாடங்களுக்கு மட்டும்தான் மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு முதல் தமிழ், ஆங்கிலம் உள்பட அனைத்துப் பாடங்களுக்கும் விடைத்தாள் நகல், மறுமதிப்பீடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் இலவச பாட புத்தகம் அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கிவிட்டது. இதன்மூலம் 1 கோடியே 26 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். 7 கோடி இலவச பாட புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் பிரச்சனை ஏற்படுவதால், இலவச பாட புத்தகங்களை, நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் செலவிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.