சிலரின் தவறான போக்கிற்கு கூடங்குளம் மக்கள் பலியாகக் கூடாது - ஞானதேசிகன்
வியாழன், 2 பிப்ரவரி 2012 (16:21 IST)
தீவிரவாத சிந்தனை உள்ள சிலரின் தவறான போக்கிற்கு கூடங்குளம் கிராம மக்கள் பலியாகக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள். திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக மத்தியக் குழுவினர் மாநில அரசுப் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் துரதிருஷ்டவசமாக அணுஉலை எதிர்ப்பாளர்களை வழிநடத்திச் செல்பவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தை விட ஒரு தீவிரவாதப் போக்கைக் கடைப்பிடித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக, வன்முறையைத் தூண்டி வருகிற போக்கில் குறிப்பாக காங்கிரசை மையப்படுத்திப் பேசி வருவதை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
இந்து முன்னணியினருக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற மோதலுக்கு காங்கிரஸ் கட்சி எந்தவகையிலும் துணை போகவில்லை. வன்முறையை ஆதரிக்கவும் இல்லை. கைதானவர்கள் அனைவரும் இந்து முன்னணியினர்.
வன்முறையை கண்டித்து அறிக்கை வெளியிட்ட சில கட்சி அமைப்பு தலைவர்கள் கூட காங்கிரஸ் கட்சியை சம்மந்தப்படுத்தவில்லை. ஆனால் தேவையில்லாமல் பத்திரிகையாளர்கள் பேட்டியில் அந்த அமைப்பு தலைவர் காங்கிரஸ் கட்சியை கொச்சைப்படுத்தி பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தீவிரவாத சிந்தனையுள்ள சிலபேரின் தவறான போக்கிற்கு கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பலியாகக் கூடாது என்றும், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்புகளை தடுக்கிற சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளப் பகுதியிலுள்ள மக்களின் வளர்ச்சித் திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வகையிலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.