வேலையில்லாதவர்கள் அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சனி, 18 ஜூலை 2009 (10:09 IST)
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலையில்லாமல் காத்திருப்பவர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வி.ஷோபனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு, பிளஸ்2, பட்டப் படிப்பு உள்ளிட்ட கல்வித்தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30.6.2009 அன்று 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகி வேலையில்லாமல் காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட தேதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். வயது 40-க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வகுப்பினருக்கு வயது வரம்பு 45 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் அரசு, தனியார், சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாமலும், அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகளுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ள பதிவுதாரர்கள் இதற்கான விண்ணப்பத்தை சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்களில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஓராண்டு பூர்த்தியானவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை அடையாள எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் ஷோபனா கூறியுள்ளார்.