ஓரிருநாளில் 5 தொதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி: நரேஷ்குப்தா

ஞாயிறு, 12 ஜூலை 2009 (17:34 IST)
தமிழகத்தில் உள்ள கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று தெரிவித்தார்.

சென்னையில் தனியார் மருத்துவமனை விழாவில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முடிந்து விட்டன. பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அவை விரைவில் முடியும் என்றார்.

கம்பம் தொகுதியில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், தொண்டாமுத்தூர் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ., கண்ணப்பன் ஆகியோர் அக்கட்சியை விட்டு விலகி தி.மு.க.வில் சேர்ந்தனர். எனவே தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இளையான்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆக இருந்த ராஜ.கண்ணப்பன் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனதால் பர்கூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பதவியை தம்பித்துரை ராஜினாமா செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வராஜ் மரணம் அடைந்தார். எனவே இந்த 5 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்