எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

வெள்ளி, 30 நவம்பர் 2012 (19:42 IST)
மருதுபாண்டியர் நினைவு தினத்தில் பாதுகாப்புக்காக இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் இருவர் இன்று மதுரையில் தப்பி ஓடினர் அவர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் குத்திக் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பிரபு, பாரதி ஆகியோர் மதுரை லேக்வியூ கோமதிபுரம் பகுதியில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடியபோது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இன்று போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் லேக்வியூ பகுதியில் இருவரும் தப்பி ஓடியதாக முதலில் போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவித்தன. அவர்களைப் போலீஸார் தேடி வருவதாகவும், அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரையும் போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்