அத்வானி கொலை முயற்சி: மேலும் இருவருக்கு வலைவீச்சு

வியாழன், 3 நவம்பர் 2011 (11:10 IST)
மதுரையில் ரதயாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அத்வானியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தொடர்பாக இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும்நிலையில் இதற்கு மூளையாகச் செயல்பட்ட இருவருக்கு காவல்துறை வலை வீசியுள்ளது.

அவர் யாத்திரை செல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்தின் அடியில் சக்திவாய்ந்த “பைப்” வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக செயலிழக்க செய்யப்பட்டது.

சிறப்பு புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலக்கப்பட்டு மதுரை நெல்பேட்டையை சேர்ந்த அப்துல்லா (வயது26), சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத்(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 2 பேரும் திருமங்கலம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிபதி அனுமதித்ததையடுத்து அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல்வேறு தகவல்களை 2 பேரும் தெரிவித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கேரளா, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு தனிப்படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்