அந்தஸ்து கருதி டக்ளஸை கைது செய்ய இயலாது - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (12:37 IST)
''டக்ளஸ் தேவானந்தா இலங்கை அமைச்சராக இந்தியா வரும்போது அந்தஸ்து கருதி அவரை கைது செய்ய முடியாது'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டெல்லிக்கு அரசு விருந்தினராக வந்தபோது டக்ளஸை கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து டக்ளஸ், தனக்கு எதிரான கைது ஆணை உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரியும், பிணை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, டக்ளசுக்கு பிணை வழங்க மறுத்துவிட்தோடு, உயர் நீதிமன்றத்தில் சரணடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அவர் சரண் அடையவில்லை.
டக்ளஸை எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கடந்த மாதம் 5ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இலங்கை அமைச்சராக இந்தியா வரும்போது அந்தஸ்து கருதி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.