முஸ்லிம் பெரு மக்கள் இன்று ஈகைப் பெருநாளை வெகு உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
webdunia photo
WD
ரமலான் மாதத்தில் பகல் நேரங்களில் உண்ணாமல், பருகாமல், இச்சைகளில் ஈடுபடாமல் நோன்பு நோற்ற உண்மையான இறை நம்பிக்கையாளர்கள், இந்த ஒரு மாதம் முழுவதையும் இறைவனுக்காகவே அர்ப்பணித்து விட்டனர்.
தங்களது நோன்புக் கடமையை தூய்மையாக முடித்த மகிழ்ச்சியைத்தான் இன்று ரம்ஜான் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.
உலக இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய அருள்மறை நூலான குர் ஆன் அருளப்பட்ட மாதமான ரமலான் மாதத்தில், மனித குலத்திற்கு இறைவன் செய்த இந்த மகத்தான உதவிக்கு நன்றி செலுத்துவதற்காகவே இந்த மாதம் முழுவதிலும் நாம் நோன்பு நோற்கிறோம்.
இந்த மாதத்தில் நோன்பிருக்கும் பெருமக்கள் எந்த சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால் உலகம் முழுவதும் சமாதானமும், அமைதியும் நிலவுகின்றன.
ஏழைகளின் பசியை உணரும் வகையில் நோன்பிருந்து, ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு முன்பு ஃபித்ரா எனும் தர்மத்தையும், ஜகாத்தையும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதன் மூலம், ஏழைகளும் பயன்பெறுகிறார்கள், அவர்களும் மகிழ்ச்சியாக ஈகைப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
ஈகைப் பெருநாள் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது :
webdunia photo
WD
"இறைவன் உங்களுக்கு இரண்டு சிறப்பான பொருட்களை வழங்கியுள்ளான். ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். எனவே இந்த இரண்டு பெருநாட்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். முழு மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். பெருநாட்களின் போது நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பெருநாளாகிய இன்று உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாளாகும். ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். இறைவனை அதிகம் நினைவுகூருங்கள்."
இன்று ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஈத் முபாரக்!