இன்று ரம்ஜான் பண்டிகை

திங்கள், 21 செப்டம்பர் 2009 (10:48 IST)
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் கடைபிடித்து வந்தனர். இதையடுத்து நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசிட்ன தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார்.

webdunia photoWD
இதனைத் தொடர்ந்து, ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள மசூதிகளில் இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து இறைவனை தொழுதனர்.

புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இன்று மசூதிகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இறைவனை தொழுதுவிட்டு தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

webdunia photoWD
இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும், தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை நேரடியாகச் சென்றும், தொலைபேசியில் அழைத்தும் தெரிவித்து வருகின்றனர்.

ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தமிழ்.வெப்துனியா.காம் சார்பில் எங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.