முருகப்பெருமான் கையில் உள்ள வேலின் சிறப்புக்கள் !!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:48 IST)
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன்.


மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன். முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது.

மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான்.

கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே. முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப் பெற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்