இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வரும் நிலையில், வீடியோ எடுக்க உயிரையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், ரீல்ஸ் மோகத்தின் காரணமாக, ஒரு வாலிபர் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் படுத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், ரீல்ஸ் மோகத்தால் ரயில் வரும்போது தண்டவாளத்தில் குப்புற படுத்துக்கொள்கிறார். அவரை கடந்து ரயில் சென்ற பின் அவர் எழுந்து வரும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. கொஞ்சம் பிசகிருந்தாலும், அவர் ரயிலில் மாட்டி விபத்துக்கு உள்ளாகியிருக்கும் என்பதும், அதனால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ரயில்வே தண்டவாளத்தில் சட்டத்திற்கு முரணாக குப்புற படுத்து வீடியோ எடுத்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, சமூக ஆர்வலர்களும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.