நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்கு எப்போது? திடீர் குழப்பம்

வியாழன், 12 டிசம்பர் 2019 (17:36 IST)
கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் 6 பேர்களால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டார். இதனை அடுத்து நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் மைனர் என்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை மட்டும் வழங்கப்பட்டு அந்த தண்டனையை அனுபவித்து அவர் விடுதலையாகி விட்டார். இன்னொருவர் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டார்
 
இந்த நிலையில் மீதி உள்ள நால்வருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது. தூக்கு தண்டனை தீர்ப்பு அளித்து ஒரு சில வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த தீர்ப்பு நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்தனர். இதனை அடுத்து நிர்பயா கொலையாளிகளையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன 
 
இந்த நிலையில் நிர்பயா கொலையாளிகளை வரும் டிசம்பர் 16ஆம் தேதி தூக்கில் போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. தூக்கிலிடும் பணியை நிறைவேற்ற உத்தரப்பிரதேசத்தில் இருந்து இரண்டு சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டிசம்பர் 17ஆம் தேதி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அக்சயகுமார்சிங் என்பவரின் மறுசீராய்வு மனு விசாரணைக்கு வர உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி இந்த சீராய்வு மனுவும் விசாரணைக்கு வரும் என்றால் 16ஆம் தேதி எப்படி தூக்கிலிட போட முடியும் என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்