ஒரு தமிழர் முதல்வராவதை பார்த்து சகித்து கொண்டிருக்க மாட்டோம்: ஒடிஷாவில் அமித்ஷா ஆவேசம்..!

Siva

புதன், 29 மே 2024 (07:37 IST)
ஒடிசாவில் ஒரு தமிழர் முதலமைச்சர் ஆவதை பார்த்துக்கொண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டோம் என தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கு சென்று விட்டு அதன் பின் பிரச்சாரம் செய்த அமித்ஷா ’பூரி ஜெகநாதர் கோவில் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு சென்று விடுவதாக மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தமிழரை முதல்வராக்க நவீன் பட்நாயக் முயற்சி செய்வதாகவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒடிசாவை சேர்ந்தவரை மட்டுமே முதல்வராக்குவோம் என்றும் கூறினார். ஒடிசா மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து சுதந்திரத்திற்காக வீரத்துடன் போராடினார்கள் என்றும் இன்று அதே ஒடிசா மக்கள் மீது தமிழ் முதல்வரை நவீன் பட்நாயக் வைக்க முயல்கிறார் என்றும் அவர் கூறினார்.

நவீன் பட்நாயக்கை ஒடிசா மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பாக ஒரு தமிழரை முதல்வராக்க முயற்சிப்பதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும் ஒடிசாவின் பெருமைக்குரிய தேர்தல் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்