வெப்கேமிரா பரிசோதனைக்கு பின்னரே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!

புதன், 1 மார்ச் 2023 (18:14 IST)
திருப்பதியில் பக்தர்களுக்கு தங்கும் அறை வெப் கேமரா பரிசோதனைக்கு பின்னரே வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியாக அறிவித்துள்ளது. திருப்பதியில் பக்தர்கள் தரகர்கள் மூலம் தங்குமறை பெற்று வருவதாகவும் இதனால் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. இதனை அடுத்து திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் வெப் கேமரா பரிசோதனை என்ற அதிநவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்குவதற்கு அறைகள் கேட்கும் பக்தர்களின் முகம் வெப் கேமரா மூலம் படம் பிடிக்கப்படும் என்றும் அவர்கள் அறையை காலி செய்யும்போது மீண்டும் வெப்கேமிராவில் பதிவான முகம் இருந்தால் மட்டுமே முன்பணம் திரும்ப செலுத்தப்படும் என்றும் இல்லாவிட்டால் முன்பணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் தங்கும் அறையை யார் புக் செய்கிறார்களோ அவர்கள் தான் காலி செய்யவும் வர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் முன்பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனால் தரகர்களை நம்பி பக்தர்கள் பணத்தை ஏமாறுவது தவிர்க்கப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்