பிரபல நடிகையின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்த நபர் கைது

ஞாயிறு, 22 நவம்பர் 2015 (09:36 IST)
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
2 ஆண்டுகளுக்கு முன்னர், பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோருக்கு தேவேந்திர குஜ்ஜார் என்பவர் அறிமுகமானார்.
 
தான் ஒரு மதகுரு என்று அறிமுகம் செய்து கொண்ட இவர், தனக்கு யோகா குரு பாபா ராம்தேவை நன்கு தெரியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகையின் பெற்றோருக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அவர் ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ஆயுர்வேத மருந்து நிறுவனம் தொடங்க உதவி செய்வதாகக் கூறி ரூ. 2 கோடி வாங்கி மோசடி செய்தார்.
 
இதைத் தொடர்ந்து, ஷில்பா ஷெட்டியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேவேந்திர குஜ்ஜாரை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் தேவேந்திர குஜ்ஜார் தன் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணிகலன் பகுதியில் பதுங்கி இருப்பதாக மும்பை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் தேவேந்திர குஜ்ஜாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்