தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைத்திருந்ததை அகற்றுமாறு பள்ளி முதல்வர் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், சில மாணவர்களை கழிவறைக்கு அழைத்துச் சென்று மத அடையாளத்தை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், மறுத்த மாணவர்களை அடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் பெற்றோர்களில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், பள்ளி முன்பாக பெற்றோர்கள் கூடி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடைபெறுவதை அறிந்த பள்ளி முதல்வர் பள்ளிக்கு வரவில்லை என்றும், ஒரு மாணவர் தனது மத அடையாளத்துடன் இருப்பதற்கு உரிமை பெற்றுள்ளான் என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், மத அடையாளத்தை அகற்ற சொல்லி அடிப்பதை ஏற்க முடியாது என்றும் கூறினர்.
இதனை அடுத்து, பள்ளி முதல்வரை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக பள்ளியின் சேர்மன் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் உறுதியளித்து அவர்களை சமாதானப்படுத்தியது.