உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில், ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென புகை எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த பிறகு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, அதில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட விசாரணையில், விமானம் தரையிறங்கியபோது இடதுபுற சக்கரத்தில் புகை எழுந்ததாக தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் இருந்து ஹஜ் பயணிகள் பயணம் செய்த இந்த விமானம், இன்று காலை லக்னோ விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சக்கரத்தில் புகை ஏற்பட்டதாகவும், இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த போதும், விமானி மிகவும் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி, அனைத்து பயணிகளையும் பாதுகாத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்ட நிலையில், அடுத்தடுத்து விமான கோளாறுகள் ஏற்பட்டு வருவது, விமானத்தில் பயணம் செய்யவே பொதுமக்கள் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.